person holding baby feet
பெண்கள்

வீட்டுப் பிரசவம் ஆபத்தானதா?

வீட்டுப் பிரசவம் ஆபத்தானதா? வீட்டுப் பிரசவம் அல்லது சுகப்பிரசவம் ஆபத்தானதா? இன்றும் உலகம் முழுவதும் கிராமப்புறங்களில் வீட்டுப் பிரசவமும் சுகப்பிரசவமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இன்னொரு பக்கத்தில் சில அரசாங்கங்களும், சில தனியார் அமைப்புகளும், ஆங்கில மருத்துவமும் வீட்டுப் பிரசவத்தை எதிர்த்து வருகின்றன.

“வீட்டுப் பிரசவம் ஆபத்தானதா?” என்ற கேள்வியை எழுப்பினால், “ஆம் ஆபத்தானதுதான்” என்றுதான் கூற வேண்டும். வீட்டுப் பிரசவம் என்பது ஆங்கில மருத்துவத்திற்கும், இரசாயன மருந்துகளைத் தயாரிப்பவர்களுக்கும், அவற்றை விற்பனை செய்பவர்களுக்கும், மருத்துவத்தின் மூலமாக செல்வம் சேர்க்கும் தொழில் அதிபர்களுக்கும் வீட்டுப் பிரசவம் ஆபத்தானதுதான்.

ஒரு பெண் கர்ப்பம் தரித்த நாளிலிருந்து, குழந்தை பிறந்து, அந்தக் குழந்தை சிறுவன் சிறுமி என்ற நிலையை அடையும் வரையில், மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், மருத்துவச் செலவுகள், மருத்துவமனை செலவுகள், அறுவை சிகிச்சைகள், தடுப்பூசிகள், என்று பல்லாயிரம் கோடிகளை ஆங்கில மருத்துவத்திற்கு குழந்தைகளைப் பெற்றவர்கள் செலவழிக்கிறார்கள்.

ஒரு பெண்மணி சுயமாக வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகிவிட்டால், அந்தப் பெண்மணிக்கு ஆங்கில மருத்துவத்தின் எந்த ஒரு உதவியும் தேவைப்படாது. அந்தப் பெண்மணியிடம் இருந்தும், அந்தப் பெண்மணியின் குடும்பத்தாரிடம் இருந்தும், ஆங்கில மருத்துவத்திற்கு லட்சக் கணக்கில் வருமான இழப்பு ஏற்படும்.

இந்த வருமான இழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இயற்கை மருத்துவத்தையும், இயற்கையான வாழ்க்கை முறையையும், இயற்கையையும், அழித்து வருகிறார்கள் ஆங்கில மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள். உண்மையை அறிந்துகொண்டோ அல்லது அறியாமையினாலோ, சில அமைப்புகளும், நிறுவனங்களும், அரசாங்கங்களும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

நம் கண் முன்னே வாழ்ந்துவரும் மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு, ஜீவன்கள் எல்லாம் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாகக் கர்ப்பம் தரித்து, சுயமாகக் கருவைச் சுமந்து, சுயமாகப் பிரசவம் செய்து கொள்ளும் போது. ஆறறிவு மனிதனுக்கு என்ன கேடு வந்தது? அவனால் சுயமாகக் கர்ப்பம் தரிக்க முடியவில்லை, சுயமாகக் கருவை வளர்க்கத் தெரியவில்லை, சுயமாகப் பிரசவம் செய்துகொள்ளத் தெரியவில்லை, எங்கே தவறு நடக்கிறது?

நம் முன்னோர்கள் என்று சொல்லத் தேவையில்லை; இன்றும் நம் கிராமங்களில் சுகப் பிரசவங்களும், வீட்டுப் பிரசவங்களும், நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதை யாரும் பெரிதுபடுத்துவதோ, தடுக்க முயற்சி செய்வதோ கிடையாது. ஏனென்றால் கிராமங்களில் வாழும் ஏழைகளிடம் பணவசதி இல்லை.

இன்று இயற்கை மருத்துவத்தையும், வீட்டுப் பிரசவத்தையும், எதிர்க்கும் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான்; ஒரு பெண் கர்ப்பம் தரிக்க விரும்பும் நாளிலிருந்து பிரசவம் ஆகும் வரையில்; கருவைக் காரணம் காட்டி அவளின் செல்வம் அனைத்தையும் சுரண்ட வேண்டும். இந்த வருமானம் கெட்டுவிடும் என்பதற்காகத் தான் அனைவரும் ஒன்று சேர்ந்து அச்சமூட்டுகிறார்கள் மிரட்டுகிறார்கள்.

இந்தச் சூழ்நிலை தொடர்ந்தால், அடுத்த ஐம்பது வருடங்களில் சுகப்பிரசவம் என்ற சொல் கூட இல்லாமல் அழித்துவிடுவார்கள். பிரசவம் என்றாலே “கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியில் எடுப்பது” என்ற சூழ்நிலையை உருவாக்கி விடுவார்கள். உங்கள் எதிர்காலத் தலைமுறையினர், எவ்வாறு வாழ வேண்டும்? எவ்வளவு நாட்கள் வாழ வேண்டும்? எவ்வாறு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்? என்பதை நீங்கள் இன்று முடிவு செய்ய வேண்டும்.

சரி… இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இதே ஆங்கில மருத்துவ முறை தானே மேற்கத்திய நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது? அங்குள்ள மருத்துவர்கள் மட்டும் எவ்வாறு வீட்டுப் பிரசவங்களை அனுமதிக்கிறார்கள்? காரணம், அங்குள்ள மக்கள் சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள், மற்ற உயிர்கள் எவ்வாறு வாழ்கின்றன என்பதைக் கவனிக்கிறார்கள், சிந்திக்கிறார்கள். நம் நாட்டிலோ பக்கத்து வீட்டுக்காரர் எப்படி வாழ்கிறார் என்பதை மட்டும் தான் பார்க்கிறோம்.

பக்கத்து வீட்டில், எதிர் வீட்டில், அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என்றால், நாமும் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றுக் கொள்வது சரிதான் என்ற முடிவுக்கு வருகிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள்.

வீட்டுப் பிரசவம் மற்றும் சுகப்பிரசவம் ஒன்றும் குதிரைக் கொம்பான காரியமல்ல. அமெரிக்கா, ஐரோப்பா, போன்ற வளர்ந்த மேற்கத்திய நாடுகள் அனைத்திலும், சுகப்பிரசவம் மற்றும் வீட்டுப் பிரசவ முறை அரசால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. ஏனென்றால் அங்கே நோயாளிகளை பணம் காய்க்கும் மரமாக மருத்துவர்கள் பார்ப்பதில்லை.

இந்தியாவில் தான் அதிகமான மருத்துவர்கள் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். நாம் தான் புத்திக்கூர்மையுடன், சிந்தித்துச் செயல்பட வேண்டும்; சிந்தியுங்கள்.

இன்று வீட்டுப் பிரசவம் கூடாது என்று கூக்குரலிடும் மருத்துவர்கள் பலரும் வீட்டில் தான் பிறந்திருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *