உறக்கமும் உடலின் மொழியும். காலையில் எழுந்திருக்கும் போது உடலும் மனமும் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கவனித்தால் அன்றைய இரவு உறக்கம் எவ்வாறு இருந்தது என்பதைக் கண்டு கொள்ளலாம். காலையில் எழுந்திருக்கும் போது உடலில் சோர்வில்லாமல், மீண்டும் உறங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல். புரண்டு சுருண்டு கிடைக்காமல் காலையில் சுறுசுறுப்பாக எழுந்திருத்தால் உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வும் உறக்கமும் கிடைத்துள்ளது என்று பொருளாகும்.
காலையில் எழுந்திருக்கும் போது மனதில் எரிச்சலும், சோர்வும், கணமும், எழுந்திருக்க வேண்டாம் என்ற எண்ணமும் தோன்றாமல், எழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணமும், அன்று என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் தோன்றினால் உங்கள் மனதுக்குத் தேவையான ஓய்வு கிடைத்துள்ளது என்று பொருளாகும்.
காலைக் கடன்களை நிறைவேற்றும் போது சோர்வும், மலம் வெளியேறுவதில் சிரமமும் சிக்கலும் இருந்தால் அன்று இரவு உங்களுக்கு போதிய உறக்கம் கிடைக்கவில்லை என்று பொருளாகும். காலைக் கடன்களை நிறைவேற்றும் போது உற்சாகமாகவும், மலம் கழிக்கும் போது சுலபமாகவும் இருந்தால் உங்களுக்கு போதிய உறக்கம் கிடைத்துள்ளது என்று பொருளாகும்.