ஆரோக்கியம்

உணவை கையால் பிசைந்து உண்ண வேண்டும்

உணவை கையால் பிசைந்து உண்ண வேண்டும். இந்த உலகில் நீர், நிலம், மற்றும் காற்றைப் போன்று எங்கும் நிறைந்திருப்பவை கிருமிகள். பழங்கள் காய்கறிகள் தாவரங்கள் பறவைகள் விலங்குகள், உயிருள்ள மற்றும் உயிர் இல்லாத பொருட்கள் என எங்கும் எதிலும் நிறைந்திருப்பவை கிருமிகள். மனித உடலில் கூட பல்லாயிரம் கோடி கிருமிகள் உயிர்வாழ்கின்றன.

கிருமிகள் பல லட்ச வகைப்படும், அவற்றில் ஒரு சிலவற்றை இன்றைய நவீன விஞ்ஞானம் அறிந்து கொண்டுள்ளது. கிருமிகளை மனிதர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய கிருமிகள் மற்றும் மனிதர்களுக்குப் பயனளிக்காத கிருமிகள் என்று பிரிக்கலாம். மனித உடலின் இயக்கத்துக்கு உதவும் மற்றும் பயனளிக்கக் கூடிய கிருமிகளை நல்ல கிருமிகள் என்றும் மனிதர்களைத் தவிர்த்து பிற உயிரினங்களுக்கும் பிற இயக்கங்களுக்கும் உதவக் கூடிய கிருமிகளை மனிதர்களுக்குப் பயன் அளிக்காத கிருமிகள் என்றும் பிரிக்கலாம்.

பூச்சாண்டி வருவான் என்று கூறி குழந்தைகளை மிரட்டுவதைப் போன்று, கிருமிகளைக் காரணம் காட்டி மக்களை மிரட்டி வியாபாரம் செய்கிறார்கள் மருத்துவத் துறையைச் சார்ந்த வியாபாரிகள். கிருமிகளின் நன்மையையும் பயன்பாட்டையும் மக்களிடமிருந்து மறைத்து; கிருமிகளை மனிதனுக்கு எதிரான ஆபத்தான ஜந்துவைப் போன்று அவர்கள் சித்தரிக்கிறார்கள்.

நம் முன்னோர்கள் அன்றே கிருமிகளின் பயன்பாட்டை உணர்ந்து, அவற்றை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினார்கள். தோசை மாவை கைகளால் கரைத்து வைப்பார்கள், சில மாவு மற்றும் தானிய வகைகளை கைகளால் அலசி மற்றும் பிசைந்து வைப்பார்கள்.

உணவுப் பொருட்களை கைகளால் பிசைந்து வைப்பதற்குக் காரணம் மனித கைகளில் இருக்கும் கிருமிகள் அந்தத் தானியம் மற்றும் உணவுப் பொருட்களில் கலந்து, அவற்றில் பல்கிப் பெருகி அவற்றை உண்ணும் வகையில் பக்குவப்படுத்தவும், மேலும் வயிற்றில் ஜீரணம் ஆகும் நிலைக்கும் அந்த உணவுகளை மாற்றவும்.

உணவை உட்கொள்ளும் போது பதப்படுத்திய உணவுகளான ஊறுகாய், வடகம், மோர், தயிர், போன்ற துணை உணவுகளை உட்கொள்வதன் நோக்கமும்; அவ்வகையான உணவுகளில் வளரும் கிருமிகள் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதால் தான்.

இவற்றைப் போன்று, நாம் கைகளால் உணவைப் பிசைந்து உட்கொள்ளும் போது கைகளில் இருக்கும் கிருமிகள் உணவில் கலந்து நம் உடலுக்குள் செல்லும். அவை நாம் உட்கொள்ளும் உணவு விரைவாக ஜீரணமாக உதவும்.

அதே நேரத்தில் உணவைக் கண்களால் பார்த்து, வாசனையை நுகர்ந்து, கைகளால் தொடும் போது, நாம் என்ன வகையான உணவை உட்கொள்கிறோம், அதன் தன்மை என்ன, என்பதைக் கண்டறிந்து உணர்ந்து கொண்டு அவற்றை ஜீரணிக்க உடல் தயாராகும்.

உட்கொள்ளும் உணவை விரைவாக மற்றும் முழுமையாக ஜீரணம் செய்வதற்கும் அதன் கழிவுகளை முழுமையாக வெளியேற்றுவதற்கும் இந்தப் பழக்கம் உதவியாக இருக்கும். இதன் மூலம் உடலுக்கு முழுமையான சத்துக்கள் கிடைக்கும், கழிவுகள் முழுமையாக வெளியேறுவதால் உடலும் சுத்தமாக ஆரோக்கியமாக இருக்கும்.

அதனால் உணவை உட்கொள்ளும் போது கண்களால் உணவை ரசித்துப் பார்த்து, அதன் வாசனையை நுகர்ந்து, கையால் பிசைந்து, பொறுமையாக மென்று விழுங்குங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *