உள்ளுறுப்புகளும் அவற்றுக்குத் தேவையான சுவைகளும். நம் உடலின் முழு ஆரோக்கியத்தையும், நம் வாழ் நாட்களையும் உடலின் உள்ளுறுப்புகளைத் தீர்மானிக்கின்றன. நமது தோலும், வெளித் தோற்றமும் எவ்வளவு அழகாக இருந்தாலும், உள்ளுறுப்புகள் பலவீனம் அடைந்துவிட்டால், உடல் உபாதைகளும், நோய்களும், மரணமும், எந்த நிமிடத்திலும் உண்டாகலாம்.
பலர் ஆரோக்கியமாக இருப்பதைப் போன்று தோன்றினாலும், திடீரென்று நோய்களும், ஊனங்களும், மரணங்களும், ஏற்படுவதற்கு உள்ளுறுப்புகளின் பாதிப்புகளே முக்கிய காரணமாக இருக்கின்றன. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உள்ளுறுப்புகளின் பாதிப்புகளை சில வேளைகளில் நாம் உணர்வதில்லை.
உள்ளுறுப்புகளும் அவற்றுக்குச் சக்தி அளிக்கும் சுவைகளும்
உள்ளுறுப்புகள் | சுவைகள் | |
---|---|---|
1 | இருதயம், சிறுகுடல் | கசப்பு, துவர்ப்பு |
2 | மண்ணீரல், வயிறு | இனிப்பு |
3 | கல்லீரல், பித்தப்பை | புளிப்பு |
4 | சிறுநீரகம், சிறுநீர் பை | கரிப்பு |
5 | நுரையீரல், பெருங்குடல் | காரம் |
உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக்கூடிய சுவைகள்.
இந்த சுவைகள் இயற்கையான பழங்களில் இருந்தும், காய்கறிகளில் இருந்தும், இயற்கை உணவுகளில் இருந்தும், உருவாகக் கூடிய சுவைகளாக இருக்க வேண்டும். செயற்கையாக உருவாக்கப்பட்ட சுவைகளும் சுவையூட்டிகளும் இதற்குப் பொருந்தாது.
இந்த சுவைகள் இயற்கையான உணவுகளிலிருந்து கிடைக்கும் போது உடல் உறுப்புகளுக்குச் சக்தி அளிக்கின்றன. அதே நேரத்தில் இந்த சுவைகள் செயற்கையான பொருட்களிலிருந்து கிடைக்கும் போது அதன் தொடர்புடைய உறுப்புகளைப் பாதிக்கின்றன.
சுவைகளை உட்கொள்ளும் முறைகள்.
சுவையுடன் உணவை விழுங்கக் கூடாது. உணவை நன்றாக மென்று, வாயிலேயே சுவைகள் மறைந்த பின்பு, உணவை விழுங்க வேண்டும். அதைப் போல் அளவுக்கு அதிகமான சுவையும் வாசனையும் உடைய உணவுகளைச் சாப்பிடக்கூடாது.
நாம் நாக்கு கேட்கும் சுவைகளை வைத்து, நம் உடலின் உள்ளுறுப்புகளின் தன்மைகளை அறிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒருவர் இனிப்பை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார் என்றால், அவரின் வயிறு பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம், அல்லது அவருடைய வயிற்றுக்குச் சக்திப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
அதைப்போல் ஒருவர் இனிப்பை அறவே ஒதுக்குவார் ஆனாலும் அவருக்கும் வயிற்றில் அல்லது மண்ணீரலில் பாதிப்புகள் இருக்கலாம். ஒருவரின் உடல் மிகவும் விரும்பும் அல்லது அறவே ஒதுக்கும் சுவைகளை வைத்து அவரின் உடல் உறுப்பின் தன்மைகளை அறிந்து கொள்ளலாம். ஒருவர் விரும்பி உண்ணும் அல்லது வெறுக்கும் சுவைகளை வைத்து அவருக்கு ஏற்பட்டிருக்கும் உடல் உபாதைகளையும், ஏற்படக்கூடிய உடல் உபாதைகளையும், அறிந்து கொள்ளலாம்.
உங்கள் உடலைக் கவனித்து அதற்குத் தேவையான சுவையை இயற்கையான உணவிலிருந்து அளித்து வந்தால், அனைத்து உடல் உபாதைகளும் மாறிவிடும்.