பொது

சீனர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும் எண்

சீனர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும் எண். நான்கு (4) என்ற எண் சீனர்களுக்கு அச்சத்தை உருவாக்கும், மேலும் சீனர்களால் வெறுக்கப்படும் ஒரு எண்ணாக இருக்கிறது. சீனாவில் மட்டுமின்றி, சீனர்கள் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் 4 என்கின்ற எண்ணை அவர்களின் இல்லத்திற்கும், வியாபாரத் தலங்களுக்கும், வாகனங்களுக்கும், மற்ற குறியீடுகளுக்கும் பயன்படுத்தமாட்டார்கள்.

எண் நான்கு (4) மட்டுமின்றி நான்கு என்று முடிவடையக் கூடிய 14, 24, 34,… 104, 1004, போன்ற எந்த எண்ணையும் அவர்களின் இல்லங்கள், வியாபாரத் தளங்கள், வாகனங்கள், போன்றவற்றுக்குப் பயன்படுத்த மாட்டார்கள். நான்கு என்ற எண் கொண்ட அல்லது நான்கு என்று முடியக்கூடிய எண்களைக் கொண்ட விடுதி அறைகளில் கூட சீனர்கள் தங்குவதற்கு அஞ்சுவார்கள்.

4 என்ற எண்ணை சீனர்கள் மரணத்தின் வெளிப்பாடாக அல்லது மரணத்தின் சின்னமாகப் பார்க்கிறார்கள். இதற்குக் காரணம் சீன மொழியில் 4 என்ற எண்ணின் உச்சரிப்பு (சீ) என்று வருகிறது. மரணம் என்ற சொல்லின் சீன மொழி சொல்லும் (சி) என்றே இருக்கிறது. நான்கு மற்றும் மரணம் என்ற இரு சொற்களின் உச்சரிப்பும் சீன மொழியில் ஒத்ததைப் போன்று இருப்பதினால் சீனர்கள் 4 என்ற எண்ணை மிகவும் வெறுத்து ஒதுக்குகிறார்கள்.

நான்கு என்ற எண் கொண்ட வீட்டில் குடியிருந்தால் பொருளாதாரம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, அன்பு, போன்றவை பாதிக்கும் என்றும்; 4 என்ற எண்ணை வியாபாரத் தளத்தில் பயன்படுத்தினால் வியாபாரத்தில் நஷ்டமும், தேவையில்லாத பிரச்சனைகளும், சிக்கல்களும், உருவாகும் என்றும்; 4 என்ற எண்ணை வாகனத்தில் பயன்படுத்தினால் எதிர்பாராத விபத்துக்களும் மரணங்களும் ஏற்படும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இந்த காரணங்களினால் பெரும்பாலான சீனர்கள் 4 என்ற எண்ணை எதற்கும் பயன்படுத்துவதில்லை, விரும்புவதுமில்லை. அறிவியல் ரீதியாக சொல்வதானால் ஒரு மனிதன் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும், ஒரு அதிர்வலையை உருவாக்கும். ஒரே சொல் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப் படும்போது அந்த வார்த்தையின் அதிர்வலைகள் ஒரு மந்திரமாக, சக்தியுடையதாக மாறுகிறது.

உதாரணத்திற்கு நம் இந்தியக் கலாச்சாரத்திலும், மற்ற பல நம்பிக்கைகளிலும் கடவுளின் பெயரையும், பெரியவர்களின் பெயரையும், இன்னும் ஒரு சில குறிப்பிட்ட வார்த்தைகளையும், மீண்டும் மீண்டும் உச்சரிப்பதை ஒரு வழிபாடாக வைத்திருக்கிறார்கள். ஒரு சில வார்த்தைகளை, வரிகளை மீண்டும் மீண்டும் உச்சரிப்பார்கள் அவற்றை மந்திரம் என்பார்கள். உச்சரிக்கும் வார்த்தைக்கு ஆற்றலை உருவாக்க இவ்வாறு செய்கிறார்கள். இதுவும் ஒருவகையில் உண்மைதான். ஒரு மனிதன் எதை மீண்டும் மீண்டும் உச்சரிக்கின்றானோ அது அவனுடைய வாழ்க்கையாகவும் நம்பிக்கையாகவும் மாற்றுகிறது.

எண்கள் மட்டுமின்றி, சொற்களும், உச்சரிப்புகளும், உச்சரிப்பின் அர்த்தங்களும், மனிதனின் வாழ்க்கையை மாற்றவல்லவை. எதைப் பேசுகின்றோம், வாசிக்கின்றோம், செவிமடுக்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X