ஒரு நிமிடத் தியானம். இன்றைய அவசர உலகில் தியானம் செய்வதற்காக நேரத்தை ஒதுக்குவது என்பது பலருக்குக் கடினமான காரியமாக உள்ளது. ஆனால் ஒரு நிமிடம் என்பது மிகக் குறைந்த காலகட்டம் தானே? ஒரு நிமிடத்தில் தியானம் செய்வது என்பது, அவசரத்தில் செய்கின்ற அரைகுறை காரியமல்ல. தியானம் செய்யும் நேர அளவும் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. தினம் தியானப் பயிற்சிகள் செய்பவர்கள் அவற்றைத் தொடர்ந்து செய்துவரலாம். வேண்டுமென்றால் இதையும் சேர்த்துச் செய்யலாம். தியானம் செய்யாதவர்கள், இந்த தியானப் பயிற்சியைச் செய்துபாருங்கள்.
இந்த பயிற்சியை காலை மாலை என தினம் இரண்டு வேலை செய்ய வேண்டும். காலையில் கண்விழித்தவுடன் ஒரு முறையும். இரவு உறங்குவதற்கு முன்பாக ஒரு முறையும் செய்ய வேண்டும். இந்த பயிற்சிக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும், எப்போதும் பயிற்சி செய்யலாம்.
தியானம் செய்யும் வழிமுறைகள்
உறங்குவதற்கு முன்பாக அல்லது உறங்கி எழுந்தவுடன், படுக்கையிலேயே இருந்துக் கொண்டு, பத்மாசனம், சுகாசனம், அல்லது உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு ஆசனத்தைப் போட்டு அமர்ந்துகொள்ளவும். முதுகெலும்பையும் தலையையும் நேராக வைத்துக் கொள்ளவும். கைகள் இரண்டையும் நன்றாக தேய்க்க வேண்டும். உஷ்ணம் உருவாகும் வரையில் தேய்த்தபின் முகம், கழுத்து, கைகள், கால்கள், மற்றும் உடலிலும் உஷ்ணத்தை பூசிக்கொள்ளவும்.
கைகளை உங்களுக்குப் பிடித்த தியான முத்திரையுடன் அல்லது உள்ளங்கை மேலே பார்ப்பது போல் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவும். மனதை எந்த ஒரு சலனமும் இல்லாமல் அமைதியாக வைத்துக் கொள்ளவும். ஒரு நிமிடம் மூச்சை மட்டும் கவனியுங்கள்.
அந்த ஒரு நிமிடம் மூச்சு எவ்வாறு உள்ளே செல்கிறது? உள்ளே எங்கே செல்கிறது? மீண்டும் எவ்வாறு வெளியேறுகிறது? என்பது மட்டும் கவனிக்கவும். ஒரு நிமிடம் செய்தால் போதும். தியானம் நிறைவு பெற்றது.
தியானம் என்பது நெடு நேரத்துக்கு செய்ய வேண்டிய விசயமல்ல, அது இயல்பாக நடக்க வேண்டிய ஒரு விசயம். நாம் தியானம் உருவாகக் கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தால் போதுமானது.