ஒவ்வொரு நொடியும் புதிதாக பிறந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில், நமக்கு ஒவ்வொரு நாளும் புதிய நாள்தான். நேற்று என்ற குப்பையையும், நாளை என்ற மாயையையும், சுமந்து கொண்டிருக்காமல், மனச் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு சுதந்திரப் பறவைகளாக சிறகடித்துப் பறந்து நமக்கு வழங்கப்பட்ட மேன்மையான இந்த மனிதப் பிறப்பைப் புரிந்துக் கொண்டு, உணர்ந்துக் கொண்டு திருப்தியுடன் வாழ்வோம்.
நிரந்தரமான வாழ்க்கையைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் ஆன்மாக்கள், நிரந்தரமில்லாத இந்த உலகத்திற்கு அடிமையாகாமல் என்றும் விழிப்புணர்வுடன் வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும். ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, தனது ஓட்டத்தை நிறுத்தி தேங்கிவிடும் போது சாக்கடையாக மாறி விடுகிறது. மனிதர்களாகிய நாமும் வாழ்க்கை ஓட்டத்தில் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி ஆறுகளாக ஓடி, கடலில் கலந்துவிட வேண்டும். எந்த ஒரு உலக ஆசையிலும், மாயையிலும் சிக்கி சாக்கடையாக இந்த உலகிலேயே தேங்கிவிடக் கூடாது.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் நிம்மதியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், செல்வமும், வாழ்க்கைக்கு அவசியமான அனைத்தும் நிறைந்த நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ எனது பிரார்த்தனைகள், வாழ்த்துக்கள்.