மனித மனதைச் சீர்கெடுக்கக் கூடிய விசயங்கள், அன்றாட வாழ்க்கையில் அவர்கள் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும், விசயங்கள் மட்டுமே. மனிதர்களின் மனம் தீய விசயங்களால் எளிதில் கவரப்பட்டு, அவற்றைப் பதிவு செய்து பின்பற்றும் தன்மையில் இருப்பதனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒரு மனிதனிடம் “உன் தெருவில் ஆவி ஒன்றைப் பார்த்தேன்” என்று சொல்லுங்கள், உடனே நம்பிவிடுவார். அவரிடமே “உன் தெருவில் தெய்வத்தைக் கண்டேன்” என்று சொல்லுங்கள் நம்பமாட்டார். மனிதர்களுக்கு நல்ல சொற்களையும் செயல்களையும் பழக்கப்படுத்துவது கடினம், தீய சொற்களையும் பழக்க வழக்கங்களையும் பழக்கப் படுத்துவது எளிது.
மனித மனங்கள் தீய விசயங்களின் மீது எளிதில் நம்பிக்கைக் கொள்வதால், மனிதர்கள் தீய குணங்களுக்கும், தீய பழக்க வழக்கங்களுக்கும், எளிதில் ஆளாகிறார்கள். அதனால் முடிந்த வரையில் தீய விசயங்களைப் பார்க்காமல், கேட்காமல், பேசாமல், வாசிக்காமல், அனுபவிக்காமல், ஒதுக்க வேண்டும். நல்ல விசயங்களைப் பார்த்து, கேட்டு, பேசி, வாசித்து, அனுபவித்து, வாழ்க்கையைச் சிறப்பாக வாழுங்கள்.