இடம் மாறும் போது மனம் மாறும். இருக்கும் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மனிதர்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். வீட்டில் இருக்கும் போது மனதில் கவலையோ குழப்பமோ உண்டாகிறது, அதனால் சற்று நேரம் கடைத்தெருவுக்கோ, மால்களுக்கோ, நண்பர்களைக் காணவோ, சினிமாவுக்கோ செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த இடங்களில் இருக்கும் போது உங்களின் மனநிலை எப்படி இருக்கும்? வீட்டில் இருந்த அதே மனநிலை தொடருமா அல்லது மாறுமா?
வீட்டில் இருந்தபோது இருந்த மனநிலை கடைத்தெருவில் இருக்காது, கடைத்தெருவில் இருந்த மனநிலை திரைப்படம் காணச் செல்லும் போது இருக்காது, திரைப்படம் பார்க்கும் போது இருந்த மனநிலை பூங்காவுக்குச் சென்றால் இருக்காது. இவ்வாறு ஒவ்வொரு இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மனிதர்களின் மனம் மாறிக்கொண்டே இருக்கும்.
பள்ளிக்கூடத்தில் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது இருக்கும் மனநிலையும், நூலகத்தில் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது இருக்கும் மனநிலையும், பூங்காவில் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது இருக்கும் மனநிலையும், வீட்டில் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது இருக்கும் மனநிலையும், வெவ்வேறாக இருக்கும். புத்தக வாசிப்பு என்ற செயல் ஒன்றாக இருந்தாலும் அந்த புத்தத்தை வாசிக்கும் சூழ்நிலை வெவ்வேறாக இருப்பதனால், அந்த வாசிப்பில் உண்டாகும் அனுபவமும் வெவ்வேறாகத்தான் இருக்கும்.
கார் அல்லது பைக்கில் செல்லும் போது மனதில் மாற்றம் உண்டாவதை தெளிவாக உணர முடியும். பயணம் செய்வதன் நோக்கம், பயணம் செல்லும் இடம், உடன் வரும் நபர், போன்றவற்றை அனுசரித்து, ஒவ்வொரு தடவையும் அனுபவம் மாறுபட்டதாக இருக்கும். பேருந்து அல்லது ரயிலில் நெடுந்தூரப் பயணம் சென்றால், அந்த ஒரு பயணத்தின் போது மனதில் பலமுறை மாற்றங்கள் உண்டாவதை உணர முடியும். பயணத்துக்கு முன்பாக ஒரு மனநிலை, பயணத்தின் தொடக்கத்தில் ஒரு மனநிலை, பயணத்தின் நடுவில் ஒரு மனநிலை, மற்றும் பயணம் நிறைவுபெறும் போது ஒரு மனநிலை, என்று மனதில் பல மாற்றங்கள் உண்டாவது உணர முடியும்.
மனித மனம் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாற்றம் அடைவதால், வசிக்கும் வீட்டின் சூழ்நிலையும் மாற்றத்தை உண்டாக்கும். வாழ்க்கையில் ஒரு மாற்றம் வேண்டும், மனநிலையில் ஒரு மாற்றம் வேண்டும், என்று விரும்புபவர்கள், வெளி ஊர்களில் வசிக்கும் பெற்றோர்கள், சகோதரச் சகோதரிகள், உறவினர்கள், அல்லது நண்பர்களின் இல்லங்களுக்குச் சென்று சில நாட்கள் தங்கி இருந்தால் மாற்றம் உண்டாகும்.
அந்த புதிய சூழ்நிலையினாலும், புதிய மனிதர்களின் உறவுகளாலும், புதிய அனுபவங்களாலும் மனதிலும், உடலிலும் நல்ல மாற்றம் உண்டாகும்.