ரெய்கி

டாக்டர் மிக்காவோ உசுய்

டாக்டர் மிக்காவோ உசுய். மறைக்கப்பட்ட கலையாக இருந்த ரெய்கி கலையை, பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் டாக்டர் மிக்காவோ உசுய் (Dr. Mikao Usui) அவர்கள். இவர் ஜப்பானில் உள்ள தனியாய் என்ற ஊரில் 15 ஆகஸ்ட் 1865 ஆம் ஆண்டு, ஜென் புத்த மரபைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தவர்.

பௌத்த மரபில் பின்பற்றப்பட்டு வந்த ஹீலிங் முறைகளின் மீது ஆர்வம் கொண்டு அவற்றை அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் 1920களில் “யமா” என்று அழைக்கப்படும் ஒரு வகையான ஆன்மிகப் பயிற்சியை மேற்கொண்டிருந்தார். அந்தப் பயிற்சிக்காக ஜப்பானில் உள்ள குரமா என்ற மலையின் மீது 21 நாட்கள் விரதத்திலும் தியானத்திலும் இருந்தார்.

மலையில் இருந்த அந்த 21 நாட்களின் “கீ” என்ற பிரபஞ்ச ஆற்றல் இயங்குவதை அவர் உணரத் தொடங்கினார். பிரபஞ்ச ஆற்றலைக் கொண்டு மனிதர்களின் நோய்களையும் பிரச்சனைகளையும் சரிசெய்யலாம் என்பதை தியான நிலையில் அவர் உணர்ந்துக் கொண்டார். பயிற்சியின் கடைசி நாளில் ரெய்கியின் பிரசன்னமும் கண்டார்.

பயிற்சி முடிந்து மலையிலிருந்து கீழே இறங்கி வந்தவர், அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கு நோய்களைக் குணப்படுத்தவும், பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், இந்த ஆற்றலைப் பயன்படுத்தி உதவிகள் செய்தார்.

வெறும் 21 நாட்கள் ஒருவர் பயிற்சி செய்தால் இந்த நிலையை அடைந்து விடலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. பிறந்த குடும்பமும், இளம் பருவம் முதலாக அவரிடமிருந்த ஒழுக்கமும், மனக்கட்டுப்பாடும், முறையான உணவு முறையும், அவர் மேற்கொண்ட பயிற்சிகளும்தான் அவர் இந்த நிலையை அடைவதற்குக் காரணமாக இருந்தன.

மிக்காவோ உசுய், அவரின் வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரெய்கி பயிற்சி அளித்தார். அவர்களில் 16 நபர்கள் மட்டுமே மாஸ்டர் அல்லது “Shinpiden” என்ற நிலையை அடைந்தார்கள். டாக்டர் மிக்காவோ உசுய் அவர்கள் 9 மார்ச் 1926 இல் காலமானார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *