ஆரோக்கியம்

விரும்பியதை சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்

விரும்பியதை சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம். நான் அதைச் சாப்பிடக்கூடாது, இதைச் சாப்பிடக் கூடாது; அதைச் சாப்பிட்டால் அது அதிகரித்துவிடும், இதைச் சாப்பிட்டால் இது அதிகரித்துவிடும், இவற்றையெல்லாம் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்து இருக்கிறார்கள், என்று உணவுகளைக் கண்டு அச்சப்படுவதை விட்டுவிடுங்கள், ஆசைப்பட்டதைச் சாப்பிடுங்கள். அளவோடு இருக்கும் வரையில் எதுவுமே கெடுதல் இல்லை, தைரியமாக இருங்கள். உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் உணவுத் தேவை.

எந்த உணவையாவது சாப்பிட வேண்டும் என்று ஆசை உண்டானால், உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளக்கூடிய உணவாக இருந்தால் தைரியமாக சாப்பிடுங்கள், எந்தத் தவறுமில்லை அளவை மட்டும் மீறிவிடாதீர்கள். எது அளவு என்றால்? உங்கள் வயிறு சொல்வதுதான் அளவு. வயிறு நிறைந்து, பசி மாறிவிட்டால், சாப்பிடுவதை உடனே நிறுத்திவிட வேண்டும்.

வெள்ளை சீனி அந்த கெடுதலை செய்யும், அஜினாமோட்டோ இந்த கெடுதலை செய்யும், கோக்க கோலா அந்த உறுப்பைக் கெடுக்கும், பெப்சி கோலா இந்த உறுப்பைக் கெடுக்கும் என்று எதற்காகவும் அஞ்சாதீர்கள். அவற்றில் பல அபாயகரமான இரசாயனங்கள் கலந்திருப்பது உண்மைதான். ஆனாலும், உங்கள் உடலும் அதன் எதிர்ப்புச் சக்தியும் அதனிலும் வலிமையானது.

மைதாவில் அது இருக்கும், உப்பில் இது இருக்கும், என்று எதற்கும் அஞ்சாதீர்கள். ஆசைப்பட்டதை அளவோடு உண்ணும் போது உடல் அதில் உள்ள உடலுக்கு ஒவ்வாத விசயங்களை சுயமாகவே வெளியேற்றிவிடும். ஆனால் அச்ச உணர்வுடன் ஒரு உணவை உட்கொண்டால், உங்கள் பயத்துக்கும், நம்பிக்கைக்கும் தக்கவாறு பக்கவிளைவுகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.

இன்றைய உலகில் பக்கவிளைவுகளும், பூச்சிக்கொல்லிகளும், இரசாயனங்களும், இல்லாத உணவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அத்தனை உணவு வகைகளிலும் ஏதாவது ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. அவர் சொன்னார், இவர் சொன்னார், அதில் படித்தேன், இதில் கேட்டேன் என்று அனைத்துக்கும் பயந்துக் கொண்டிருந்தால், எதைத்தான் சாப்பிடுவது? இன்று விஞ்ஞானிகள் கண்டுப் பிடித்திருக்கிறார்கள், தாய்ப்பாலில் மூலமாக சில வேதிப்பொருட்கள் குழந்தைக்கு செல்கிறது என்று. அதற்காக தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட முடியுமா?

ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன் மைதாவில் பென்சாயில், குளோரின், பொட்டாசியம் புரோமைடு, என்சைம், அசெடொன் பெராசைட், இவ்வாறான பல ஆபத்தான இரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. அவை உடலுக்கு மிகவும் ஆபத்தானவை. சரி இப்போது கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்போம், உணவைச் சமைத்தப் பின்னர் இந்த இரசாயனங்கள் அப்படியே இருக்குமா அல்லது அதன் தன்மைகள் மாற்றமடையுமா?

என்னதான் ஆபத்தான இரசாயனமாக இருந்தாலும் அதை சமைக்கும் போதும், அந்த இரசாயனம் மற்ற உணவுப் பொருட்களுடன் கலக்கும் போதும் அதன் தன்மை கண்டிப்பாக மாறிவிடும், அப்படியே இருக்காது. அதனால் எதற்காகவும் பயப்படாதீர்கள். பசித்தால் அல்லது அதிக ஆசை உண்டானால், ஆசைப்பட்டதை சாப்பிடுங்கள். அதில் உள்ள கழிவுகளையும், ஆபத்தான விசயங்களையும் உங்கள் உடலே வெளியேற்றிவிடும்.

எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நான் சொன்னேன் என்பதற்காக, வேண்டுமென்றே இரசாயனம் கலந்த உணவுகளையும், தீங்கு செய்யக் கூடிய உணவு வகைகளையும் தேடிச் சாப்பிடாதீர்கள். பசியின் அளவுக்கு, அளவோடு நன்றாக மென்று விழுங்குங்கள் மற்றதை உங்கள் உடல் பார்த்துக் கொள்ளும்.

அளவோடு இருக்கும் வரையில் எதுவும் பாதகமில்லை, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

1 Comment

  • Akshayaa February 2, 2023

    சூப்பர் சார் ருசித்து ரசித்து சாப்பிடும் போது தேவை அடங்கிவிடும் அந்த அளவில் போதும் என்ற உணர்வு வந்து விடும். உண்மையில் அனுபவம் செய்யும் பொழுது புரியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X